நள்ளிரவில் பயங்கரம்… வீடு புகுந்து கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு..!

கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, ஜனதா நகரை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மகன் சரவணக்குமார் ( வயது 23 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். சரவணகுமார் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் .அப்போது இரவு 11 மணி அளவில் ஒரு கும்பல் அவரது வீட்டில் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த மாணவன் சரவணகுமாரை எழுப்பி கோவை காமராஜ்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபர் குறித்த விவரங்களை கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது . அப்போது ஆத்திரமடைந்த கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து உடைத்து சூறையாடியது. பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி கல்லூரி மாணவர் சரவணகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவருக்கு தலை, மற்றும் நெற்றியில் அரிவாள் வெட்டுவிழந்தது. இதனை பார்த்து தடுக்க முயன்ற அவரது மாமா பாலசுப்பிரமணியத்தையும் அந்த கும்பல் வெட்டியது இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது .இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் 3பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.