கோவை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்: பெண் டாக்டர், நூலகர் பலி – 4 பேர் படுகாயம்..!

கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் டாக்டர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் (வயது73) இவரது மனைவி டாக்டர் பிரிசில்லா ( வயது 73 )இவர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்கள். தற்போது தாராபுரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள்.நேற்று முன்தினம் இரவு தாராபுரம் சென்று விட்டு கோவைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். காரை டாக்டர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் ஓட்டினார்.சூலூர் காடம்பாடி அருகே வந்த போது எதிரே வந்த மற்றொரு காரும் இவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இதில் கார் ஓட்டி வந்த டாக்டர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் அவரது மனைவி பிரிசில்லா, மகன் மோகன். மற்றொரு காரில் இருந்த கணபதியை சேர்ந்த ஜெயராமன் (வயது 51) மனைவி அமுதா ஞான அரசி (வயது 45) மகள் சுவித்ரா (வயது 11) ஆகிபோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியில் டாக்டர் பிரிசில்லா இறந்தார். படுகாயம் அடைந்த ஜெயராமன் சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் நூலகராக (லைப்ரரியன்) பணிபுரிந்து வந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .இது குறித்து மோகன் சூலூர் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக கார் ஓட்டி வந்த ஜெயராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.