மதுரை ரயிலில் பயங்கர தீ விபத்து… பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு..

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ – ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் வந்த பாரத் கௌரவ் ஆன்மீக சுற்றுலா ரயில் அதிகாலை மதுரை ரயில் நிலையம் வந்தடைந்துள்ளது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அடுத்தடுத்து பெட்டிகளில் பரவியது.

இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி ரயிலில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில்  டீ தயார் செய்வதற்காக சிலர் முயற்சித்தபோது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ரயில் விபத்து நடந்த இடத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு நடத்தி வருகிறார்.