நடுத்தர குடும்ப பெண்களே குறி… 1.50 கோடி சுருட்டிய மாடர்ன் மம்மி யூடியூபர் ஹேமலதா.!!

அப்பாவி பெண்களை குறி வைத்து மோசடி செய்த யூடியூபர் ஹேமலதாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டனை சேர்ந்த ஹேமலதா கடந்த 2000 – ம் ஆண்டு “மாடர்ன் மம்மி “என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் பதிவிட்ட வீடியோக்கள், நடுத்தர பெண்களிடம் வரவேற்பை பெற்றது. ஹேமலதாவின் யூடியூப் சேனலை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பார்த்து வந்தனர். எனவே அவர்களை மேலும் கவரும் வகையில் யூடியூப் சேனலில் சுய லாபத்துடன் கூடிய வர்த்தக விளம்பரங்களை பதிவு செய்து வந்தார்.

ஏராளமான பெண்கள் பார்த்ததால் அவர்களை குறி வைத்து பணத்தை பெற்று மோசடி செய்ய ஹேமலதா திட்டமிட்டார். தங்களிடம் ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.1500 வழங்கப்படும் என்று வீடியோ பதிவு செய்தார்.

சிறிய தொகைக்கு பணத்தை வட்டியுடன் கொடுத்ததால் இதனை நம்பி வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் பணத்தை செலுத்தினர். இதனால் ஹேமலதாவுக்கு லட்சக் கணக்கில் பணம் சேர்ந்து உள்ளது. அந்த நேரத்தில் ஹேமலதா செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து தலைமறைவானார். இது வாடிக்கையாளர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் இது தொடர்பாக கோவை குற்றப் பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் ஹேமலதா முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் வசூலித்த விவரம் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஹேமலதா, அவருடைய கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடி குறித்து குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

யூடியூபர் ஹேமலதா கிட்டத்தட்ட 595 வீடியோக்களை சேனலில் பதிவிட்டு உள்ளார். இவருக்கு 1.59 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம் என்று கருதுகிறோம். எனவே மாடர்ன் மம்மி சேனல் மூலம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தர வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத் தர முடியும். அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்த போது முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 50 லட்சம் வந்துள்ளது தெரியவந்தது. இதுவரை 43 பேர் புகார் செய்து உள்ளனர். மேலும் பலர் புகார் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைதான யூடியூபர் ஹேமலதா, அவரது கணவர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. என்று கூறினர்.