தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்வார்கள்- அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை..!

தேசிய கல்விக்கொள்கையை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஜி20 கல்விக்குழு கருத்தரங்கம் பயனுள்ளதாக இருக்கும் எனவும், தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற G20 முதல் கல்வி பணிக்குழுவின் கூட்டத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, “G20 மாநாடு இந்தியா தலைமையில் நடைபெறுகிறது. தற்போது கல்விக்கான முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 29 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் UNICEF பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். சென்னை கல்வியில் சிறந்த நகரமாகத் திகழ்கிறது. எனவே நாம் கர்வம் கொள்ள வேண்டும். புதிய தேசியக் கல்வி கொள்கையை உலக அளவில் கொண்டு செல்ல இந்த கருத்தரங்கம் பயன்படும். இந்த ஆண்டு முழுவதும் 56 நகரங்களில் தொழில், கல்வி, நிதி மற்றும் மீன் வளம் என பல்வேறு துறைகளில் G20 கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

உலக அளவில் திறமைமிக்க இளைஞர்களை உருவாக்கும் நோக்கத்தில் தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அவரவர் மொழிகளிலேயே கல்விகள் வழங்கப்படுவதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் ஏற்றுக் கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.