தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1,400 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை 20-ந் தேதி நடக்கிறது..!

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 20-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 18 உறுப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 567 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 413 இடங்களும் உள்ளன.இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 20-ந் தேதி வரை பெறப்பட்டது. மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது.
தரவரிசை அடிப்படையில்
இதில், பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 1,400 இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை உடனடிமாணவர் சேர்க்கையின் (ஸ்பாட் அட்மிஷன்) மூலம் வரும் 20-ந் தேதி நிரப்ப பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உடனடி கலந்தாய்வில், பொதுகலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று அதனை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் மற்றும் புதிதாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம். மாணவர்களின் தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
அட்டவணை
மேலும், மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக் கீடு, கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், காலியிடங் களுக்கான அட்டவணை ஆகியவை பல்கலைக்கழகத்தின் www.tnau.ucanapply. com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் 0422-6611345 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
நடவடிக்கை
மேலும், வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் காலதாமதம் இருக்காது. ஜூலை 15-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் வகுப்புகள் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.