தமிழக அரசியலில் செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சுமார் ₹397 கோடி மதிப்பில் நடை பெற்றதாகக் கூறப்படும் இந்த கொள்முதல் முறைகேடுகள் குறித்து ஆவணப் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டி, சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தவெக அரசு தரப்பில் வியூகங்கள் அமைக்கப்பட்டு வருவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. அக்காலகட்டத்தில் மின்வாரியச் செயலாளராகப் பணியாற்றிய ராஜேஷ் லக்கானி, இந்தக் கொள்முதல் நடைமுறைகள் மற்றும் டெண்டர் விவகாரங்கள் குறித்த முழுமையான தகவல்களை அறிந்தவர் என்பதால், அவரை அரசு நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்பில் மீண்டும் கொண்டு வந்துள்ள முடிவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அவரது நிர்வாக அனுபவம் மற்றும் உள்விவரங்கள் மூலம் பெறப்படும் வலுவான சான்றுகளின் அடிப்படையில், வழக்கை மேலும் ஆதாரப்பூர்வமாக மாற்றுவதே மேலிடத்தின் திட்டம் எனக் கருதப்படுகிறது.
ராஜேஷ் லக்கானி அளிக்கும் தகவல்கள் மற்றும் சேகரிக்கப்படும் சான்றுகள் மூலம், செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டச் சிக்கல்களைப் பலமாக்கி அவரை மீண்டும் சிறையில் தள்ள நிர்வாக மட்டத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், தவெக அரசு தனது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதோடு, அரசியலில் தனக்கான பிடியையும் மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.









