திடீரென திரண்ட கார்மேகங்கள்… எங்கும் சூழ்ந்த இருள்… சட்டென மாறிய வானிலை… மகிழ்ச்சியில் சென்னை மக்கள்.!!

சென்னையில் திடீரென வெயில் தாக்கம் குறைந்து அடைமழை பெய்வதற்கான அறிகுறியாக கருமேகங்கள் சூழ்ந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழ்நாட்டில் கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் பல பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்று காலை முதல் வெயில் அடித்து வந்தது. பெரிய அளவில் இல்லை என்றாலும் மக்கள் சற்று அவதியடைந்தனர்.

இந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் வெளிச்சம் மறைந்து எங்கும் இருள் சூழ்ந்தது. திடீரென வானிலை மாறியதால் மக்களும் அடைமழை பெய்யுமோ என்ற அச்சத்துடன் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சென்னையின் புறநகர் பகுதியான ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் ஆகிய இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.