சீனாவில் பிரபலங்களின் திடீர் மரணம்… கொரோனா அச்சத்தில் மக்கள் – என்னதான் நடக்குது..!

சீனாவில் சில பிரபலங்களின் திடீர் மரணம், அந்நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருப்பதைக்காட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை ரத்து செய்யப்பட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன்பிறகு சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்து சரியான தகவல்களை சீன அரசு வெளியிடாமல் தவிர்த்து வருகிறது. இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ஓபரா பாடகரான 40 வயதான ச்சு லான்லான் சமீபத்தில் மரணமடைந்தார். இளம் வயதில் அவர் இறந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ச்சு லான்லான் திடீரென்று இறந்துபோனதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவரது இறப்புக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.

சீனாவில், சுவாசப் பிரச்னைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற நிலையில், கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுப்பதாக சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம் 21 முதல் 26-ஆம் தேதிக்குள், சீனாவின் முதன்மையான அறிவியில் மற்றும் பொறியியல் அகாடமிகளைச் சேர்ந்த 16 விஞ்ஞானிகள் மரணமடைந்தனர். அவர்களுடைய மரணத்துடன், தற்போதைய ச்சு லான்லான் மரணத்தையும் சேர்த்து, நாட்டில் கொரோனா பரவலும், இறப்பும்அதிகரித்துள்ளதோ என்ற அச்சத்தை அந் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.