தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்குப் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதுவரை மொத்தம் 4,23,955 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் சமீப காலமாகவே நிறைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளும் சிறந்த கற்பித்தல் முறையும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளன. அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் பெற்றோர் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் விளைவாக இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. புதிதாக சேர்ந்த மாணவர்களில், 1ம் வகுப்பில் மட்டும் 2,94,209 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அதேபோல, 2ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 88,515 மாணவர்கள் புதிதாக வந்து இணைந்துள்ளனர்.
எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளில் 41,231 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் அதே வசதிகளும், சிறப்பாக பயிற்றுவிக்கும் முறையும்தான் பெற்றோர் மத்தியில் இந்த அளவுக்குப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மார்ச் 1ம் தேதியிலிருந்தே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிடுகிறது. மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாகிறது.. பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும், ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வருகிறார்கள்.. அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருவதற்குத் தமிழக அரசு கொண்டுவந்துள்ள முக்கியத் திட்டங்களே காரணம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்குத் தரும் தமிழ்ப் புதல்வன் திட்டம், என்ஜினீயரிங் மற்றும் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு, போன்ற திட்டங்கள் எல்லாமே பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச நலத்திட்டங்கள், நவீன உள்கட்டமைப்பு, கற்றல் வசதிகள் குறித்த விழிப்புணர்வு பெற்றோரிடையே அதிகரிக்கப்பட்டது. இதற்காகவே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நேரடியாக களத்தில் இறங்கி, ஊர் ஊராகவும் வீடு வீடாகவும் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் நன்மைகளையும் சலுகைகளையும் பெற்றோருக்குத் தெளிவுபடுத்தினர். அந்தப் பிரசாரத்திற்குத்தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாணவர் சேர்க்கை இன்னும் தொடர்ந்து நடந்து வருவதால், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று கல்வித்துறை எதிர்பார்க்கிறது… மொத்தத்தில், கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 24 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை இப்போது நடைபெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது… !!








