வீட்டின் முன்பு நிறுத்திய திமுக பிரமுகர் காரை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்-போலீசார் விசாரணை..!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை சிவந்தரம் வள்ளலார் வீதியை சேர்ந்தவர் சையது முகமது அலி (வயது 51). இவர் தி.மு.க.வில் எல்.பி.எப் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

சம்பவத்தன்று அவர் தனது காரை வீட்டின் முன்பு கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைத்திருந்தார். இன்று காலை வீட்டின்‌ வெளியே வந்து பார்த்தார். அப்போது கார் எரிந்த நிலையில் இருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சையது முகமது அலி இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து சையது முகமது அலி போலீசில் புகார் அளித்தார். புகாரில் அவர் கடந்த வாரம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வாடகை வாகனங்கள் நிறுத்துவதில் சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சிலர் எனது காரை தீயிட்டு கொளுத்திருக்கலாம் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்த காரை தீ வைத்து எரித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.