ஓடும் பேருந்தில் பயணிகளிடம் பணம், நகை திருட்டு..!

கோவை சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மனைவி நித்தியா (32). இவர் சின்ன தடாகம் பகுதியில் இருந்து டவுன்ஹாலுக்கு பேருந்து மூலம் வந்தார் . ஒப்பணக்கர வீதி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய போது அவர் பர்ஸில் வைத்து இருந்த மூன்று பவுன் தங்கச் செயின் , 52 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து நித்தியா பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

இதேபோல கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி கமலம் (62) லட்சுமி மில் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தார் . வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது அவரது கழுத்தில் அணிந்து இருந்த இரண்டு பவுன் தங்கச் செயின் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து கமலம் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீளமேடு கருப்பண்ண கவுண்டர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் பீளமேடு பகுதியில் இருந்து சித்ராவிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். சித்ரா பேருந்து நிறுத்தம் அருகே இறங்கிய போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 16 ஆயிரத்து 200 ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது. இது குறித்து குப்புசாமி பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.