தமிழகத்தில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு : இ-ஸ்டாம்பிங்’ முறை ஆர்வம் காட்டாத மக்கள்..!

திருப்பூர் : கோவை, திருப்பூர் உட்பட, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் முத்திரை தாள் தட்டுப்பாடு நிலவுகிறது; தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில் பதிவு துறையின் கீழ், 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பதிவுத்துறை அலுவலகத்தில் சொத்து கிரயம் செய்வதற்கு, 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் ஆகிய மதிப்புள்ள முத்திரைத்தாள் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் (ஸ்டாம்ப் வெண்டர்) மூலம் முத்திரைத்தாள் விற்கப்படுகிறது.கடந்த, ஓராண்டாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய, 5 ஆயிரம் முதல், 25 ஆயிரம் மதிப்புள்ள முத்திரைதாள் வரை தட்டுப்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது.பத்திரப்பதிவு முறைகளின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க, ‘இ-ஸ்டாம்பிங்’ என்ற மின்னணு முத்திரைதாள் கட்டணத்தை செலுத்தும் முறையும் அமலில் உள்ளது. இந்த புதிய முறையை மக்கள் முழுமையாக பயன்படுத்த முன்வருவதில்லை. இதனால், முத்திரைத்தாளையே அதிகம் கேட்டுகின்றனர்.

அவர்களுக்கு, வழங்கும் அளவுக்கு இல்லாமல் தட்டுப்பாடு தொடர்கிறது. அதிகரித்துள்ள பத்திரப்பதிவுகோவை மாவட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர் சங்க தலைவர் சுந்தரராமன் கூறுகையில், ”ஐந்தாயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை உள்ள முத்திரைதாள் கடந்த சில மாதங்களாக கோவை மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலத்தில் முத்திரை தாள் விற்பனையாளர்களுக்கு வழங்குவதில்லை. சார்நிலை கருவூலத்தில் கேட்டால், நாசிக் நகரிலிருந்து வரவில்லை என்று கூறுகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அதிக மதிப்புள்ள முத்திரைதாள் தேவைப்படுகிறது. தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.அதிக மதிப்புள்ள தாள் கிடைப்பதில்லை . கோவை மண்டல இணை இயக்குனர் (கணக்கு / கருவூலம்) சுப்புலட்சுமி கூறுகையில், ”அதிக மதிப்புள்ள தொகைக்கான முத்திரை தாள்களின் தேவைக்கு ஏற்ப, பிற மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு, மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

ரூபாய், 10 முதல், 5 ஆயிரம் மதிப்புள்ள வரை முத்திரை தாள் கிடைக்கிறது. அதிக மதிப்புள்ள தொகைக்கான முத்திரை தாள் சென்னையில் இருந்து வருவதில்லை. எந்த பகுதியில் தேவைப்படுகிறது என்பது குறித்து விசாரிக்கிறோம்,” என்றார்.உடனடியாக விசாரிக்கப்படும்தமிழக பதிவுத்துறை தலைவர் சிவனருளிடம் கேட்டதற்கு, ”முத்திரை தாள் தட்டுப்பாடு கிடையாது. தட்டுப்பாடு என்பதுபொய்.

எந்த பகுதியில் இல்லை என்பது குறித்து உடனடியாக விசாரிக்கப்படும். முத்திரை தாள் இல்லையென்றாலும் கூட, குறைந்த மதிப்பிலான முத்திரை தாளை, முதல்பக்கத்தில் மட்டும் வைத்து விட்டு, மீதமுள்ள தொகைக்கு ‘ஆன் லைன்’ மூலம் செலுத்தலாம். ‘இ-ஸ்டாம்பிங்’ முறையை மக்கள் தாராளமாக பயன்படுத்தலாம்,” என்றார்.திருப்பூர் மாவட்டம் ‘டாப்’: ரூ.145 கோடிக்கு விற்பனைகடந்த சில ஆண்டுகளாக, அரசு சார்பில், முத்திரைத்தாள் அச்சடிப்பதற்கு பணம் வழங்கப்படுவதில்லை; ‘இ-ஸ்டாம்பிங்’ முறையை முழுமையாக மக்களிடத்தில் கொண்டு செல்வதற்காக ஏற்படுத்தப்படும் செயற்கை தட்டுப்பாடு இது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.தட்டுப்பாடு காரணமாக, விற்பனை ஆகாமல் உள்ள முத்திரைத்தாள் குறித்து விபரம் சேகரிக்கப்பட்டது. பின், வேலுார், கரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, கோவை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு, திருப்பூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. அவ்வகையில், கடந்த ஒரு ஆண்டில் (2021 ஜூலை முதல் நடப்பாண்டு ஜூன் வரை) 5 ஆயிரம் மதிப்புள்ள முத்திரைத்தாள்(35 ஆயிரம் எண்ணிக்கை) – 17 கோடியே, 50 லட்சம் ரூபாய்; 10 ஆயிரம் மதிப்புள்ள (13 ஆயிரம்) – 13 கோடி ரூபாய்; 15 ஆயிரம் மதிப்புள்ள (17 ஆயிரத்து, 500) – 26 கோடியே, 25 லட்சம் ரூபாய்; 20 ஆயிரம் மதிப்புள்ள (19 ஆயிரம்) – 38 கோடி ரூபாய்; 25 ஆயிரம் மதிப்புள்ள (8 ஆயிரம்) – 20 கோடி ரூபாய் என, மொத்தம், 145 கோடியே, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள் வினியோகம் செய்யப்பட்டு, விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.