தாளவாடியில் ரேஷன் அரிசி கடத்தல் – மொபட்,130 கிலோ அரிசி பறிமுதல்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  தாளவாடி மலைப்பகுதியில் இருந்து பொது வினியோக திட்ட ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் வருவாய் துறை ஊழியர்கள் ராமாபுரம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே மொபட்டில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்ற போது வாகனத்தில் வந்த நபர் வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதைத் தொடர்ந்து மொபட்டில் வைத்திருந்த மூன்று சாக்கு மூட்டைகளில் 130 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து வருவாய் துறையினர் பிடிபட்ட ரேஷன் அரிசி மற்றும் மொபட் வாகனத்தை தாளவாடி போலீசார் மூலம் ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.