ஓடும் அரசு பேருந்தில் இருந்து இருக்கையோடு ரோட்டில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர் – திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்.!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து கேகே நகர் நோக்கி அரசு நகர பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார் .நடத்துனராக திருச்சி எடமலைபட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (54) பணியாற்றினார். பிற்பகல் 3:30 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து சென்றது. பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் கடைசியில் இருந்து வலது புறத்தில் உள்ள மூன்றாவது இருக்கையில் நடத்துனர் முருகேசன் உட்கார்ந்திருந்தார்.
திருச்சி நகரப் பேருந்துகளில் நடத்துனருக்கு என்று தனி இருக்கை கிடையாது. அந்த பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து பத்திரிகை அலுவலகம் அருகே வலது புறம் திரும்பியது. அப்போது நடத்துனர் முருகேசன் அமர்ந்திருந்த இருக்கை திடீரென உடைந்து படிக்கட்டு வழியாக ரோட்டில் வந்து விழுந்தது. இதில் உட்கார்ந்து இருந்த நடத்துனர் முருகேசன் தூக்கி வீசப்பட்டார். ரோடில் விழுந்ததில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தனர். காயமடைந்த நடத்துனர் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடைந்து ரோட்டில் விழுந்து கிடந்த இருக்கையை தூக்கி பேருந்தில் வைத்துக் கொண்டு மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. இதில் வந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரசு பேருந்தில் இருக்கை கழண்டு வெளியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது அரசு பேருந்துகளின் தரம் எந்த நிலையில் உள்ளது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு நடத்துனர் பலத்த காயத்தோடு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் போக்குவரத்து துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பொதுமக்கள் சாடுகிறார்கள் இனிமேலாவது தமிழக அரசு போக்குவரத்து துறை அதிகாரியிடம் பொதுமக்கள் பயணம் செய்யும் பஸ் போக்குவரத்துக்கு உகந்ததா என்பதை தினம் தினம் சோதனை செய்து அதன் பிறகு போக்குவரத்துக்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்..