அதிர்ச்சி… கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு..!

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.

பாட்னா: பிகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 2016ஆம் ஆண்டு பூரண மதுவிலக்கு சட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியது. இந்த மதுவிலக்கு சட்டம் இருப்பதால், பல இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை தொடங்கியது.

இதனால், கள்ளச்சாராயம் தொடர்பாக பலரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் சாப்ராவின் மஷ்ராக், இசசுவாபூர், மதுரா மற்றும் அம்னூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் சாப்ரா சதர் மருத்துவமனை, பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (PMCH) மற்றும் நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (NMCH) ஆகிய மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 126 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.