குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டால் பள்ளியை நிரந்தரமாக மூட வேண்டும்- கோவையில் நடிகை கஸ்தூரி பேட்டி..!!

கோவையில் நேற்று டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை கண்டு ரசிக்க நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். போட்டி முடிந்ததும் அவர் செய்தியாளர்களுகு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என நாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும், மர்மமான மரணங்களும் நிகழ்ந்து வருகிறது.
வேலியே பயிரை மேய்வது போல் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளது. இது வருத்தத்தை தருகிறது. இவை அரசியல் மற்றும் போலீசார் உதவியுடன் மூடி மறைக்கப்படுகிறது.இதை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தற்போது காவல்துறை மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சம்பவத்தில் ஒரு உயிர் பிரிந்துள்ள நிலையில் இந்த சம்பவம் அரசியல் விவாத பொருளாக மாறிவிட்டது.
விமர்சித்தவர்கள்
சம்பவம் நடந்து 3 நாட்களாக மாணவியின் பெற்றோர் அமைதியாக விளக்கம் கேட்ட போது எந்த பதிலும் தராத அரசு கலவரம் நடந்த பிறகு பல அறிக்கைகள் தந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது காவல்துறையை நம்பாதீர்கள் என கூறிய தி.மு.க, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காவல்துறை காரணமல்ல, சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என கூறுகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் இதே கருத்தை அன்று முதல்வராக இருந்த இ.பி.எஸ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறிய போது விமர்சித்தவர்கள் தற்போது கூறுவதை எப்படி ஏற்க முடியும். இதேபோல் கடந்த ஆண்டு பள்ளி மீதான பாலியல் குற்றச்சாட்டு சம்பவத்தில் அப்பள்ளியின் பெயரை தொடர்ந்து கூறி விமர்சித்தார்கள்.

இன்று பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பள்ளியின் பெயரை கூறுவதில்லை. அதற்கும் அரசியல் தான் காரணம். தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று கோவையில் அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போக்சோ சட்டத்தை போன்று எத்தனை சட்டங்கள் வந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தினால் மட்டுமே பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் குறையும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஆசிரியர்கள் ஈடுபடும் பட்சத்தில் அப்பள்ளியை நிரந்தரமாக மூட வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் இருந்தது போல் ஆன்லைன் மூலமாகவே மாணவ- மாணவிகள் படிக்க ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.