சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பூச்சாட்டு விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவின் முதல் நிகழ்வாக  பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர்.
சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பண்ணாரி அம்மன் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அதிகாலை 4 மணி முதல் மாலை வரை  தொடர்ந்து 12 மணி நேரம் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். இதனிடையே இந்த ஆண்டு குண்டம் திருவிழாவின் முதல் நிகழ்வாக  அதிகாலை பண்ணாரி அம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்தனர். கோவிலில் மேளதாளம் முழங்க ஆண் மற்றும் பெண் பக்தர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெப்பக்குளத்திற்கு சென்று தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. பின்னர் பண்ணாரி அம்மனிடம் பூ வரம் கேட்டு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இன்று முதல் பண்ணாரி அம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கிராமங்கள் தோறும் திருவீதி உலா நடைபெற உள்ளது. ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெறுகிறது.