மக்கள் மருந்தகத்தால் ரூ.5,000 கோடி சேமிப்பு-மருந்து துறை தலைவர் அறிவிப்பு ..!

சென்னை : ”மக்கள் மருந்தகங்கள் வாயிலாக, கடந்த நிதியாண்டில் மக்களின் 5,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது,” என, மத்திய மருந்து மற்றும் மருத்துவ கருவிகள் துறை தலைமை செயலர் அதிகாரி ரவி தாதிச் தெரிவித்தார்.

சென்னை பெரம்பூரில் உள்ள மருந்தகத்தில், பிரதமரின் மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய அவர் பேசியதாவது:நாட்டில் 8,700 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் உள்ளன. இதன் வாயிலாக 1,600 வகையான மருந்துகள், 250 அறுவை சிகிச்சை உபகரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் 120 மக்கள் மருந்தகங்கள் வாயிலாக, தரமான உயிர்காக்கும் மருந்துகள், மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. மத்திய மருந்து மற்றும் மருத்துவ கருவிகள் துறை சார்பில், மக்கள் மருந்தகங்களில், அதிக தேவையுள்ள மருந்துகளை இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் மருந்தகங்கள் வாயிலாக, மலிவான விலையில் மருந்துகள் வழங்கப்படுவதால், கடந்த நிதியாண்டில் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ரவி தாதிச் பேசினார்.