மின் இணைப்பு வழங்க கோரி குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட பெயிண்டர் – கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கண்ணப்ப புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி கீதாராணி.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கீதாரணியின் வீட்டின் அருகே குடியிருக்கும் அவரது அண்ணன் தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த கோவை குமார் என்பவர் அவர்களது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து வெங்கடேஷ் மற்றும் கீதாராணி ரத்தினபுரி , சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெங்கடேஷ், கீதா ராணி ஆகியோர் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு தங்களது 2 மகன்களுடன் வந்தனர். அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மின் இணைப்பை உடனடியாக வழங்க கோரியும், குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 4 பேரையும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.