உக்ரைனில் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்த புதின் திட்டம்-ஜோ பைடன் மீண்டும் பகிரங்க குற்றச்சாட்டு.!!

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைனில் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன் உக்ரைனை எளிதில் கைப்பற்றி விடலாம் என்ற ரஷ்யாவின் திட்டம் பலனளிக்கவில்லை என்றார். இதனால் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களை கையில் எடுக்க ரஷ்ய திட்டமிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டிய பைடன், இதற்காகவே உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புதின் பொய் புகார் கூறிவருவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே வரும் 25-ம் தேதி உக்ரைன் எல்லை நாடுகளில் ஒன்றான போலந்திற்கு செல்ல இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்குள் செல்ல திட்டமில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மனிதாபிமான உதவிகள், அகதிகள் பாதுகாப்பு குறித்து மட்டுமே பைடன் போலந்து அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.