கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்: இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார் -அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நெம்மேலி பகுதியில் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார் என மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் கே என் நேரு பேசினார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சென்னை தங்க சாலையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோர் இந்த விழிப்புணர்வு பேரணியைக் கொடி அசைத்துத் துவக்கி வைத்தனர். முன்னதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் திறந்து வைத்தார். சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் கே. என் நேரு, ‘1300 எம்.எல்.டி குடிநீர் இருந்தால் மட்டுமே சென்னையின் ஒரு நாள் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். செம்பரம்பாக்கம் ஏரி பகுதியிலிருந்து குடிநீர் கொண்டுவருவதில் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி வாங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அது முடிந்தால் 260 எம்.எல்.டி குடிநீர் கூடுதலாகச் சென்னைக்குக் கொண்டு வரமுடியும்.

கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக, குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஏற்கனவே 548 இடங்களிலே 4.5 கோடி மக்களுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நெம்மேலி பகுதியில் கடல் நீரைக் குடி நீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார். அதன் மூலம் 160 எம்.எல்.டி கூடுதல் குடிநீர் சென்னைக்குக் கிடைக்கும்.

இந்த ஆண்டு மட்டும் முப்பதாயிரம் கோடி செலவில் குடிநீர் வழங்கும் பணிகளை முதலமைச்சர் துவங்கியிருக்கிறார். தமிழக அரசின் சார்பில் இயற்கையாகவே தண்ணீரைத் தேக்கி மக்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.