பிரதமர் நரேந்திர மோடி-அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மே 24ம் தேதி சந்திப்பு.!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்த மாதம் இருபத்தி நான்காம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த சந்திப்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது.

அடுத்த வாரம் டோக்கியோவில் நடைபெற உள்ள “குவாட்” நாடுகள் மகாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே மாதம் 24ஆம் தேதியன்று நடைபெற உள்ள அந்த மாநாட்டில் பிரதமர் மோடி ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிதா உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடத்த உள்ளார். உக்ரைன் போர் தாக்கம் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவை கடுமையாக எதிர்த்து வரும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் இந்தியாவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வரும் இந்தியா, பிற நாடுகளின் வலியுறுத்தல் அடிப்படையிலே ரஷ்யா மீது தடைகளை விதிக்க முடியாது என வலியுறுத்தி வருகிறது. ஆகவே ஐநா சபையில் உக்ரைன் குறித்த தீர்மானங்களில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவில்லை.

பிரதமர் மோடியை டோக்கியோவில் நேரில் சந்திக்கும் அமெரிக்க அதிபர் பைடன் மீண்டும் ஒரு முறை இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி ரஷ்யா மீது தடைகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்த வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பிந்தைய சூழல், உலகை அச்சுறுத்தி வரும் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா பாதுகாப்பு விவகாரங்களில் தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவுக்கு உதவ வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக இந்தியாவின் கிழக்கு எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் தொடர்வதால், பாதுகாப்பு ரீதியான ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குவாட்” அமைப்பிலே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உறுப்பினர்களாக உள்ளன. சீன அச்சுறுத்தலை சமாளிக்க இந்த கூட்டணியை வலுப்படுத்த முயற்சிகள் சமீப வருடங்களாக வேகம் பிடித்து வருகின்றன. ஜப்பான் நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமரும் டோக்கியோவில் நடைபெற உள்ள மகாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் அவரையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய நாட்டில் மே இருபத்தி ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.