நூல் விலை ஏற்றத்தை கண்டித்து… 15 நாள் வேலை நிறுத்தம்.. ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு..!

நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் விசைத்தறிகள் 15 நாட்களுக்கு இயங்காத சூழல் உருவாகும்.

நூல் விலை ஏற்றத்தை கண்டித்து ஏற்கனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் 50 சதவீத உற்பத்தி வேலை நிறுத்தம், நூல் கொள்முதல் நிறுத்தம் மற்றும் 16, 17 தேதிகளில் முழுமையான வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களை செய்தும் நூல் விலைக்கு ஏற்றபடி ஜவுளி விலை உயராத காரணத்தால் இந்த 15 நாள் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் அளவில் ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர்.

எனவே, பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.