இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் புஷ்கர் தாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக,நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும்,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதியில் புஷ்கர் தோல்வி அடைந்திருந்தார்.இதனால்,அவர் பதவி விலக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து,புஷ்கர் தாமிக்காக,மாநில சட்டசபைக்கான புதிய முயற்சிக்கு வழி வகுக்கும் வகையில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கைலாஷ் கெஹ்டோரி,தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும், தாமிக்காக பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உத்தரகாண்ட் முதல்வருக்காக பிரச்சாரம் செய்தார்.

இந்த சூழலில்,சம்பாவத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை புஷ்கர் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.இது பாஜகவினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

“சம்பாவத் தொகுதியில் இருந்து சாதனை வெற்றிக்காக உத்தரகாண்டின் ஆற்றல்மிக்க முதல்வர் புஷ்கர்தாமிக்கு வாழ்த்துகள்.உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு அவர் இன்னும் கடினமாக உழைப்பார் என்று நான் நம்புகிறேன்.பாஜக மீது நம்பிக்கை வைத்ததற்காக சம்பாவத் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு,நமது காரியகர்த்தாக்களின் கடின உழைப்பைப் பாராட்டுகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.