ஆகஸ்ட் மாதத்தில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வில் இந்தியாவின் பெரிய மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் விலை உயர்வில் தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்திருக்கிறது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடங்கி அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயரத் தொடங்கியது. குறிப்பாக அரிசி, மளிகை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், தக்காளி, பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தன. அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை உயர்ந்தது.
வெங்காய விலை உயர்வால், ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை உணர்ந்தனர். அதுமட்டுமல்லாமல் மின்சார கட்டணமும் உயர்ந்தது. இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் ஆகஸ்ட் மாதத்திற்கான விலைவாசி உயர்வு தொடர்பாக சில விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வில் இந்தியாவின் பெரிய மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் விலை உயர்வில் தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்திருக்கிறது. தேசிய சராசரி 4.82 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 5.92 சராசரியாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த விலைவாசி உயர்வில் தெலங்கானா 6.27% முதலிடத்திலும், தமிழ்நாடு 5.92% 2வது இடத்திலும் இருக்கின்றன. அதேபோல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், ஆந்திர பிரதேசம் 2வது இடத்திலும், தமிழ்நாடு 3வது இடத்திலும் இருக்கின்றன. இதனால் மாத செலவையே சமாளிக்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் திண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தேசிய சராசரியை விட மாநிலத்தில் விலைவாசி உயர்வு அதிகமாக இருப்பதுடன், பொருளாதார ரீதியாக குடும்பங்களின் பட்ஜெட்டை இது பெரிதும் பாதித்துள்ளது. அதேபோல் தேசிய அளவில் ஜிஎஸ்டி வருவாயும் 1% குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.









