பொன்னியின் செல்வன் படம்… எப்படி இருக்கு..? ரசிகர்கள் கருத்து..!!

கோவை:
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் படம் எப்படி உள்ளது என்பது குறித்து கோவை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் பாகம் 1 என்ற திரைப்படமாக இயக்கியுள்ளார். நடிகர்கள் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என நடிகர்கள் பட்டாளத்தோடு தயாரான திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கோவை மாநகர பகுதிகளில் மட்டும் 14 திரையரங்குகளில் 40 திரைகளில் திரைப்படம் வெளியானது. அதிகாலை 5 மணி முதல் சிறப்பு திரையிடப்பட்டு வரும் நிலையில் கோவை மக்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். கல்கியின் புத்தகத்தில் படித்த வரிகளை மணிரத்தினம் காட்சியாக கண் முன் நிறுத்தியுள்ளதாகவும், படத்தின் முதல் பகுதியில் கதாபாத்திரங்கள் புரியவில்லை என்றும் இரண்டாம் பகுதியில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும், படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆவலோடு காத்திருப்பதாகவும், அருள்மொழி வர்மனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே பலரும் கல்கியின் புத்தகத்தை படிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.