பொங்கல் பண்டிகை… ரயில்களில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்..!!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரெயில்வே டிக்கெட்டுகளின் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

ஜனவரி 10ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோரும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 14ல் போகி பண்டிகை, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16மாட்டு பொங்கலும், ஜனவரி 17 காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது

வழக்கமாக பண்டிகைகள் என்றாலே பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. அந்தவகையில், தமிழர் திருநாளான பொங்கலை சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

இவர்கள் பணி நிமித்தமாக, படிக்கவும், வியாபாரத்துக்காகவும் சென்னையில் உள்ளனர். முக்கிய பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களில்தான் தான் பண்டிகை கொண்டாடுவார்கள். இதற்காக, சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணமாவார்கள்.. அனைவரும் மொத்தமாக ஒரே சமயத்தில் கிளம்பி செல்வதால், ரயில், பஸ்கள் போதுமான அளவுக்கு கிடைக்காமல் போக்குவரத்து மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவிடும்.அன்றைய தினத்தில் மட்டும் சுமார் 5 முதல் 10 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பி விடுவார்கள்.

அந்தவகையில், சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரயில் பதிவு குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 10ம் தொடங்கி பொங்கல் விடுமுறை நாட்களுக்கான முன்பதிவை செப்டம்பர் 12ம் தேதி முதல் அதாவது இன்று முதல் IRCTC இணையதளத்தில் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மேலும் சொல்லும்போது, “120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால், வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள மக்கள் , முன்கூட்டியே ரயில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும். ஏற்கனவே, தீபாவளிக்கு அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களை தேர்வு செய்து, சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் இணைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.பொங்கல் பண்டிகைக்கு செல்வோர், இன்று 12ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல, ஜனவரி 10ம் தேதி பயணிக்க விரும்புவோரும், இன்றைய தினம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். இதனை பொங்கல் பண்டிகைக்கு பயணிப்போர் திட்டமிட்டுக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே துறையின் இந்த அறிவிப்பானது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.