கோவை புதிய மேம்பால பணியின் போது சரிந்து விழுந்த இரும்பு சாரம்- அச்சத்தில் மக்கள்..!

கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.9 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்படும் மேம்பாலம் சுமார் 215 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிட்டபடி தற்போது இப்பாலத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இது தவிர 265 கோடி ரூபாய் செலவில் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று இடங்களில் பாலத்தின் ஏறுதல் மற்றும் இறங்குதல் வடிவில் மூன்று பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

கோவை மாநகரத்தின் உக்கடம் டவுன்பஸ் பேருந்து நிலையத்திலிருந்து புதிய வடிவில் ஏறுதல் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

குறிப்பாக உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பாலங்களின் ஐந்து இடங்களில் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாங்கு தூண்களை இணைக்கும் பாலத்திற்கு இரும்பு சாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 3000-க்கும் மேற்பட்ட இரும்பு சாரங்களை இணைத்து இந்த சாரம் போடப்பட்டிருந்தது. நேற்று இரவு பில்லர் அருகே கான்கிரீட் போடப்பட்டுள்ளது.

அப்போது 200 அடி நீளத்திற்கு 100 அடி அகலத்திற்கு போடப்பட்ட கான்கிரீட் பாலம் சாரத்துடன் வடக்கு நோக்கி சாயத் துவங்கியது.

அதிர்ச்சியடைந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் பணியை நிறுத்தினர். கான்கிரீட் பாலம் காம்பவுண்ட் சுவரை தாண்டி அருகில் இருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பி – பிளாக் தொகுப்பு வீடுகள் மீது விழும் அபாயம் இருந்தது.

இந்த தொகுப்பு வீடுகளின் பிளாக்கில் 30 வீடுகள் உள்ளன. இந்த பிளாக்கில் வசித்து வந்த மக்கள் பாலம் சரியப் போவதை கண்டு அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கான்கிரீட் பாலம் தாங்கு சாரம் சரிவு குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் தகவல் வாயிலாக தெரிவிக்கையில், சாரத்தில் இருந்த இணைப்பு கிளாம்புகள் சில இடங்களில் துண்டாகிவிட்டது. இதை சரி செய்து சாரத்தை சீரமைக்கும் பணி நடக்கிறது.

கான்கிரீட் பகுதி கீழே விழாமல், சரியான பகுதியில் இருந்து கான்கிரீட் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என கண்டறியப்படும் அதற்கேற்ப திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வீடுகளின் மீது கான்கிரீட் பாலம் விழாமல் இருக்கவும் எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.