பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரபென் மோடி காலமானார். அவருக்கு வயது 100.

உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கிக் கூறினர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் மோடியின் தாயார் விரைந்த நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஹீரபென் மோடி வயது முதிர்வு காரணமாக காலமானார். தாயாரின் மறைவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தனது 100-வது பிறந்தநாளை ஹீராபென் கொண்டாடினார். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கே வந்து அவர் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.