ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்தது – தாயாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உருக்கமான பேச்சு..

கமதாபாத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் மோடியின் வீட்டில் ஹீராபென் மோடி வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பை பிரதமர் மோடியே முதன்முதலில் அறிவித்தார். தாயின் மறைவை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு போற்றத்தக்க நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் என் தாயிடம் உணர்ந்தேன். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்று 100வது பிறந்தநாளின்போது சந்தித்த போது என் தாய் சொன்ன வார்த்தைகள் எப்போதும் என் நினைவில் இருக்கும்” என்று உருக்கமாக பதிவிட்டார்.

அகமதாபாத் விரையும் பிரதமர்: தனது தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத் விரைந்துள்ளார். அகமதாபாத் சென்றாலும், இன்று திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இன்று கொல்கத்தா மாநிலம் ஹவுராவில் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்க இருந்தார். மேலும் சில வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஹீராபென் மறைவால் இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திட்டங்களை தொடங்கிவைப்பார் என்று பிரதமர் அலுவலகம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.