கஞ்சா போதையில் இருந்த பிளஸ் 2 மாணவர் கொலை..

கோவை சரவணம்பட்டி பகுதியில் சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். போதை பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் கஞ்சா போதையில் இருந்த மாணவர் தனது பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள நூலகத்தின் முன் படுத்திருந்தார். இதனை கண்ட அவரது நண்பர்கள் சிலர் அவரை வீட்டுக்கு எழுந்து செல்லுமாறு வற்புறுத்தி உள்ளனர். ஆனால் போதையில் இருந்த மாணவர் அவர்களின் பேச்சைக் கேட்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் அவரது நண்பர்கள் அவரை கைகளால் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் போதையில் இருந்து மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சக மாணவர்கள் அவரை மீட்டு சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் வழியிலே இறந்துவிட்டதாக கூறினார்கள். இது பற்றி தகவல் அறிந்தது சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சா போதையில் இருந்த மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.