ஆதார் அட்டையை போல ‘மக்கள் ஐ.டி’- தமிழக அரசு திட்டம்..!

சென்னை: ஆதார் அட்டையை போல, தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களை கொண்ட ‘மக்கள் ஐ.டி’யை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார், மொபைல் சிம், வங்கி பரிவர்த்தனை, ரேஷன் பொருட்கள், பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மற்றும் அரசின் பலன்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாகி உள்ளது.

இந்த நிலையில், ஆதாரை போல, தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் உள்ள ‘மக்கள் ஐ.டி’யை தமிழக அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ‘மக்கள் ஐ.டி எண்’ சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு எண் பெரிதும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இதற்காக மாநில குடும்ப தரவு தளம் தமிழக அரசால் உருவாக்கப்பட உள்ளதாகவும், அடையாள எண் வழங்க மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மென்பொருள் தயாரானதும் சில மாதங்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.