கன்னிமலை எஸ்டேட்டில் விடிய விடிய சுற்றி திரியும் படையப்பா யானை – ஆட்டோவை சேதப்படுத்தி அட்டகாசம்..!

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த மரியதாஸின் ஆட்டோவை படையப்பா எனும் காட்டுயானை சேதப்படுத்தியது.கன்னிமலை, நயமக்காடு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் படையப்பா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடமாடி வருகின்றது.கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணிக்கு நுழைந்த படையப்பா மரியதாஸின் ஆட்டோவை சேதப்படுத்தியது. அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் யானையை விரட்டினர். அதன் பிறகு நள்ளிரவு 12:30 மணிக்கு மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்த யானை தோட்டங்களிலும், வீடுகளின் அருகிலும் இருந்த வாழைகளை தின்று விட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு காட்டிற்குள் சென்றது.விடிய, விடிய படையப்பா குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரிந்ததால் தொழிலாளர்கள் தூக்கத்தை இழந்தனர்.