நடைமுறைக்கு வந்த ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச்சட்டம்- தமிழகத்தில் கைகொடுக்குமா..?

மிழ்நாட்டில், ஆன்லைன் சூதாட்டங்களில் சிக்கிப் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

ஆன்லைன் சூதாட்டத்தின்மீதான மோகம் காரணமாகப் பணத்தை இழக்கும் இளைஞர்கள், மன விரக்தியில் விபரீத முடிவெடுக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 6-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர், உளவியல் மருத்துவர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே மற்றும் ஐ.பி.எஸ் அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தக் குழு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் எனவும் கூறப்பட்டது. குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைச்சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் இந்தக் குழு ஆய்வு நடத்தி, 27.6.2022 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைவிதிப்பது தொடர்பாகப் பொதுமக்கள் 10,735 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 99 சதவிகிதம் பேர் தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், ஆன்லைன் கேம் விளையாடும் மாணவர்கள் குறித்து இரண்டு லட்சம் அரசுப் பள்ளி ஆசியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், 70 சதவிகிதம் பேர் மாணவர்களுக்குக் கவனச்சிதறல் ஏற்படுவதாகவும், 67 சதவிகிதம் பேர் மாணவர்களின் கண்பார்வை பாதிக்கப்படுவதாகவும், 74 சதவிகிதம் பேர் மாணவர்களின் அறிவு, சிந்தனை, எழுத்துத்திறன் குறைந்திருப்பதாகவும், 76 சதவிகிதம் பேர் மாணவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகரித்திருப்பதாகவும், 75 சதவிகிதம் பேர் மாணவர்கள் ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு, ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட மசோதா-2022-ஐ உருவாக்கியது. இந்த மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்டிருந்தது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த அவசர சட்டத்துக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியிருக்கிறார். மேலும், அக்டோபர் 17-ம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது சட்டமாக இயற்றப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அவசரச் சட்டம் குறித்து அரசிதழிலும் வெளியாகியிருக்கிறது.

அரசிதழில், ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் இயற்றப்பட்ட பின்னர் தமிழ்நாட்டில் எந்த நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை. எந்த ஊடகங்களிலும், செயலிகளிலும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு வங்கிப் பணப் பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கத் தடை. சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முடிவு.                                                                                                                                                                                                                                                                                            ஆணையத்தின் உறுப்பினர்களாக ஐடி வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, கண்காணிப்பது, தரவுகளைச் சேகரிப்பது, குறைகளுக்குத் தீர்வு காண்பது, விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.