ரயில் என்ஜினில் சிக்கி ஒருவர் பலி : 6 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து வரப்பட்ட ஆண் உடல்..!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா வரை செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலானது, நேற்று காலை சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

இதனை கண்ட ரயில் டிரைவர், ஹாரன் அடித்தார். இதனால் பதற்றமடைந்த அந்த நபர், தண்டவாளத்தின் மைய பகுதி நோக்கி தவறுதலாக குதித்துவிட்டார். அப்போது ரயில் என்ஜினின் முன்பக்க கொக்கியில் அவரது தலைபகுதி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ரயில் என்ஜினின் முன்பகுதியில் சிக்கிய அந்த நபரின் உடல் ரயிலில் தொங்கியவாறு இழுத்து வரப்பட்டதை தொடர்ந்து ரயில் டிரைவர் கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சிவப்பு சிக்னல் கொடுக்கப்பட்டு அந்த எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.

பின்னர் என்ஜினின் முன்புறம் தொங்கியவாறு 6 கிலோ மீட்டர் தூரம் இழுத்து வரப்பட்ட உடலை ரயில்வே போலீசார் மீட்டனர். ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினின் முன்புறம் 6 கிலோ மீட்டர் வரை ஆண் உடல் இழுத்து வரப்பட்டது ரயில் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.