காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி கானக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜடையப்பன் (60). இவரது மனைவி மாதம்மாள் (55). இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கிராமம் என்பதால் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இதற்கிடையே சடையப்பன் மற்றும் அவரது மனைவி மாதம்மாள் இருவரும் தினமும் இரவில் உருளைக்கிழங்கு பயிருக்கு காவல் இருந்து வந்தனர். முன்தினம் இரவு வழக்கம் போல் காவலுக்குச் சென்ற இருவரும் விவசாய நிலத்தில் அமைத்து இருந்த குடிசையில் தங்கி இருந்தபோது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டு யானை விளை நிலத்தில் புகுந்து உருளைக்கிழங்கு பயிர்களை சேதப்படுத்தியது‌. காட்டு யானையை கண்ட ஜடையப்பன் மற்றும் மாதம்மாள் இருவரும் யானையை விரட்ட முயற்சித்த போது காட்டு யானை இருவரையும் துரத்தியது. அப்போது காட்டுயானை தும்பிக்கையால் மாதம்மாளை பிடித்து தாக்கி காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். சத்தம் கேட்ட கிராம மக்கள் அப்பகுதிக்கு சென்று காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கேர்மாளம் வனத்துறையினர் மற்றும் ஆசனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து உடல் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. யானை தாக்கி இறந்த மாதம்மாளின் குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.4.50 லட்சம் நிவாரணம் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். பயிருக்கு காவல் இருந்த மூதாட்டி காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.