டீசல் + ஐசோபியூட்டனால் கலப்பு!

ந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பதைப் போல விரைவில் டீசலுடன் ‘ஐசோபியூட்டனால்’ என்ற புதிய அதிநவீன பயோ எரிபொருளைக் கட்டாயமாகக் கலந்து பயன்படுத்துவதற்கான திட்டத்தை இந்த ஆண்டு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் டீசல் பயன்பாடு பெட்ரோலை விட இரு மடங்கு அதிகமாக இருப்பதால், இந்த ஐசோபியூட்டனால் கலப்புத் திட்டம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கணிசமாகக் குறைத்து, எரிசக்தி சேமிப்பை இருமடங்காக உயர்த்த உதவும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் வி.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டாலும், அதை டீசலுடன் கலப்பதில் எரியும் வெப்பநிலை குறைவு மற்றும் இன்ஜின் அரிப்பு போன்ற பல பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், நான்கு கார்பன் அணுக்களைக் கொண்ட ஐசோபியூட்டனால் டீசலுடன் நன்றாகக் கலக்கக்கூடியது, அதிக எரிசக்தி கொண்டது மற்றும் இன்ஜின்களை அரிக்காதது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இது குறித்து நடத்திய ஆராய்ச்சிகள் நல்ல பலனைத் தந்துள்ளதால், மத்திய அரசின் கட்டாயக் கலப்பு விதிகள் அமலுக்கு வந்தவுடன் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் இந்த ஐசோபியூட்டனால் கலப்பைத் தொடங்கவுள்ளன.

விவசாயக் கழிவுகள் மற்றும் தாவரக் கழிவுகள் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆதாரங்களில் இருந்து உள்நாட்டிலேயே எளிதாகவும் மலிவாகவும் தயாரிக்கப்படும் இந்த ஐசோபியூட்டனால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவை பெருமளவு குறைக்கும். இதனால் டீசல் விலை ஏற்ற இறக்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஸ்திரத்தன்மையுடன் இருக்கும். மேலும், இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால், நாட்டின் நெடுஞ்சாலைப் போக்குவரத்தைக் கார்பன் இல்லாத தூய்மையான திசையை நோக்கி நகர்த்தும் மத்திய அரசின் முயற்சிக்கு இது ஒரு பெரிய ‘கேம் சேஞ்சராக’ அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.