குறைந்தபட்ச போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.சி தொழிலாளர்கள் போராட்டம்..!

கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி அலுவலகம் முன்பு பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., ஹெச் எம் எஸ்., எம்.எல் எஃப்., ஐ.என்.டி.யு.சி., என்.டி.எல்.எஃப்., அம்பேத்கர் யூனியன், ஏ.டி.பி., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 8 அமைப்புகளை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து என்.டி.சி.,யை காப்பாற்றுங்கள் ஒருங்கிணைப்பாளர் ராஜமணி கூறியதாவது:-
தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஆலைகள் இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் 23 ஆலைகள் இயங்கி வந்தன. கொரோனா கால விதிவிலக்கு கொடுக்கப்பட்ட பிறகும் என்.டி.சி ஆலைகள் சட்டவிரோதமாக வேண்டுமென்றே இயக்கப்படவில்லை.
பாதி ஊதியம் மட்டும் கொடுத்துவந்தார்கள். முழு ஊதியம் கொடுக்க வேண்டும் அதுவரை மில்லை ஓட்டுகிற வரை ஆலைகளை இயக்க வேண்டும் என்று கூறினோம்.
கடந்த 10 மாதங்களாக பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படவில்லை. பாதி ஊதியமும் இரண்டு மாதமும் கொடுக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் குறந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை.
1 லட்சம் கோடி உள்ளது. நிலம் விற்ற பணம் 2 ஆயிரம் கோடி வரவேண்டி உள்ளது. அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும். கடந்த 29 மாதங்களாக தொழிலாளர்கள் சொல்லிலடங்கா துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
கல்விக்கட்டணம் செலுத்த முடியவில்லை, இ.எம்.ஐ உள்ளிட்ட எந்தவித கட்டணமும் செலுத்த முடியவில்லை. இதனால் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.
கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் கல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சரியான முடிவு வரை கலைந்து செல்ல மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.