பள்ளி அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் பிரிவில் ஒரு பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படி நேற்று மாலை ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சோதனை நடத்தினார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த சுகந்த குமார் (வயது 23) என்பது தெரிய வந்தது . கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை வடமாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வந்து பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் , வடமாநில தொழிலாளர்களுக்கும் ரகசியமாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..