நீலகிரியில் கம்பளி விற்பது போல் நடித்து கொடூரமாக புலியை வேட்டையாடும் வடமாநில கும்பல் கைது..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வட மாநில கும்பலை பிடித்து சோதனை செய்ததில், புலி தோல், நகம், எலும்பு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், நீலகிரி மாவட்டம் குந்தா காப்புக்காட்டில் புலியை வேட்டையாடியதும், சத்தியமங்கலம் பகுதியில் தங்கி இருந்து புலித்தோலை விற்பனை செய்ய முயன்றபோது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புலியை வேட்டையாடியதாக கூறப்படும் நீலகிரி வனப்பகுதியில், கடந்த வாரம் அவர்களை அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், புலியை வேட்டையாட பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவிகள், தற்காலிக கூடாரம், பாத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் கொடூரமாக வேட்டை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பவாரியா கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், வட மாநில கும்பல் தங்கி இருந்த எடக்காடு தக்கர் பாபா நகர் பகுதியில் வனத் துறையினர் மற்றும் எமரால்டு போலீசார் நேற்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சில வீடுகளுக்குள் புகுந்து சோதனை செய்தனர். இப்பகுதியில் கம்பளி விற்பனை செய்வதுபோல வட மாநில கும்பல் வந்து, 2 ஆண்டுகள் வரை தங்கி இருந்து புலி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அங்கு வசிக்கும் உள்ளூர் நபரின் ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியுள்ளனர். அந்த நபரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து, இந்த சம்பவம் நடைபெற்ற சமயங்களில் யார், யாருக்கு தொடர்பு கொண்டனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அங்கு தங்கியிருந்த போது என்ன வேலைக்கு சென்றார்கள்? யாருடன் நெருங்கி பழகினார்கள்? சொந்த ஊருக்கு சென்று வந்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறோம். இதற்கிடையே சோதனை செய்தபோது ஒரு வீட்டில் இருந்து மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேட்டையாடி மான் கொம்பு எடுத்துவரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.