பெண் துணி காய போடுவதை வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர் அடித்து கொலை- 2 பேர் கைது-கோவையில் அதிர்ச்சி..!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி, பாலாஜி கார்டனை சேர்ந்தவர் ராமன் .இவரது மகன் ராஜேந்திரன் ( வயது 56) கூலி தொழிலாளி .இவர் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் துணித் துவைத்து காயப்போடுவதை மாடியில் நின்று வீடியோ எடுத்தாராம். அதை அந்தப் பெண்ணின் மருமகன் தினேஷ்குமார் ( வயது 30) மற்றும் உறவினர் சந்தோஷ்குமார் (வயது33 )ஆகியோர் தட்டி கேட்டனர் .இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் சேர்ந்து ராஜேந்திரனை தாக்கினார்கள் .இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் இறந்தார்.இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாமோதரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் இதையடுத்து கொலை செய்ததாக தினேஷ் குமார் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர் .இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது,