சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய்,மகளுக்கு கொரோனா உறுதி : உடன் இருந்த அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை..!

துரை : சீனாவில் கொரோனா தாண்டவம் மீண்டும் அதிகரித்து கோடிக்கணக்கானோர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய் மகள் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பையும், உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது.

சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இரண்டாவது அலை, மூன்றாவது அலை என தனது ஆட்டத்தை காட்டத் தொடங்கிய கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதளபாதாளத்தை நோக்கிச் சென்றது.

இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இதனையடுத்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய் மகள் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. இன்று அதிகாலையில் இலங்கையின் கொழும்பில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு ஏர் லங்கா விமானம் அதிகாலையில் வந்தது. விமானத்தில் பயணம் செய்த 70 பயணிகளுக்கும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து அவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகளுக்கு கொரோனா பரிசோதனை பாசிட்டிவ் என வந்துள்ளது. தற்போது கொரோனா பரிசோதனை பாசிட்டிவ் முடிவு வந்துள்ள தாய் மற்றும் மகள் சீனாவில் இருந்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் சீனாவில் வேலை செய்து வருகிறார். தற்போது பணி நிமித்தமாக அவர் ஜெர்மனி சென்ற நிலையில் சீனாவில் இருந்து தாய் மற்றும் மகள் இலங்கை வந்து அங்கிருந்து விமான மூலம் மதுரை வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த தாய் மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்தில் இருந்து தமிழகம் வந்த 70 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரப்பட்டுள்ளனர். பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். ஏற்கனவே சீனாவில் இருந்து உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முதன்முறையாக சீனாவில் இருந்து மதுரை வந்த பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.