பாதிரியார்களின் மகன்களை குறி வைத்து பண மோசடி… போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்- அடுத்தடுத்த புகாரில் சிக்கும் போலி பெண் பாதிரியார்..!

ணமோசடி புகாரில் வழக்கில் சிக்கியுள்ள போலி பெண் பாதிரியார், போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பேராயர் காட்ப்ரே நோபல். இவர் சில நாட்களுக்கு முன்பு பெண் பாதிரியார் மானுவேல் மரியா செல்வம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் பெண் பாதிரியார் மானுவேல் மரியா, பாதிரியார்களின் மகன்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பெண் பாதிரியார் மானுவேல் மரியா செல்வத்தைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலி பெண் பாதிரியார் என்பதும், பண மோசடியில் ஈடுபட்டு பணத்துடன் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. குறிப்பாக அவர் இலங்கையைச் சேர்ந்த பெண் என்பதால் அவரது குடியுரிமை ஆவணங்களை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இந்திய முகவரியுடன் இந்திய பாஸ்போர்ட் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து குடியுரிமை அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், விசாரணை மேற்கொண்டபோது மானுவேல் மரியா செல்வம், இந்திய குடியுரிமைக்கான போலி ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் பெற்றதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து குடியுரிமை அதிகாரி நிபின் ஜோசஃப் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றபிரிவு போலீஸார். போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் வாங்கியது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.