போலி ஆடியோ வெளியிட்டு வதந்தி பரப்புவதாக மாநகர மாவட்ட செயலாளர் புகார்..!

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் நா. கார்த்திக். இந்த நிலையில் இவர் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது .அந்த ஆடியோவில் கட்சி தலைமை, மூத்த அமைச்சர்கள் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோரை விமர்சித்துபேசுவதாக இருந்தது. இந்த ஆடியோ வேகமாக பரவியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர் .மேலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மாநகர மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் இந்த ஆடியோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் போலி ஆடியோவை தயார் செய்து தன் மீது சிலர் அவதூறு பரப்புவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனு கொடுத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- நான் திமுகவில் மாணவரணி, இளைஞர் அணி மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளேன். மாநகராட்சி துணை மேயர் ,எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளேன். திமுகவின் வளர்ச்சிக்கு கொள்கைக்கும் குந்தகம் ஏற்படாமல் திமுக தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைத்து செயல்படுகிறேன். கடந்த அதிமுக ஆட்சியின் போது என் மீது பொய்யாக 39 வழக்குகள் போட்டனர். அந்த வழக்குகளை சட்டரீதியாக சந்தித்து வருகிறேன். எனது பணிகளை கண்டு பொறாமை பட்டு சில சமூக விரோதிகள் நான்பேசியதாக போலி ஆடியோவை தயார் செய்து வதந்தி பரப்ப வெளியிட்டுள்ளார்கள். இந்த பொய்யான அவதூறான ஆடியோவை வெளியிட்ட சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்.. இவ்வாறு அவர் கூறினார்.