போர்க்களமாக மாறிய மணிப்பூர்… 60 பேர் பலி – 1,700 வீடுகள் தீயிட்டு நாசம் – முதல்வர் அறிவிப்பு..

பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மையாக இருக்கும் மேதி சமூகத்தினரைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குக்கி, நாகா பழங்குடியினர் நடத்திவரும் ஒற்றுமைப் பேரணி ஒருவார காலமாக பெருங்கலவரமாக வெடித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கலவரத்தில் வீடுகள், மருத்துவமனைகள், கடைகள், தேவாலயங்கள் போன்றவை தீக்கிரையாகின. கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தினரை இறக்கி பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிவருகிறது அரசு.

இதற்கிடையில், கண்ணில்படும் வன்முறையாளர்களைச் சுட்டுத்தள்ளுமாறு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கலவரத்தில் இதுவரையில் மட்டும் 60 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் முதல்வர் பிரேன் சிங் அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து நேற்று பேசிய முதல்வர் பிரேன் சிங், “வன்முறைக்குப் பின்னணியிலுள்ள நபர்கள், குழுக்கள், தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிய அரசு ஊழியர்கள்மீது உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்.

வன்முறையில் இதுவரை 60 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 231 பேர் காயமடைந்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மே 3-ம் தேதியன்று நடந்த கலவரத்தில் சுமார் 1,700 வீடுகள் எரிந்து நாசமாகின. எனவே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பெரிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்க அமைச்சரவை முடிவுசெய்திருக்கிறது.

மணிப்பூரில் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அவர்கள் மாற்றப்பட்டுவருகிறார்கள். குறிப்பாக 1,593 மாணவர்கள் உட்பட 35,655 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். இன்னும் சுமார் 10,000 பேர் கலவரப்பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். யாரும் பொதுப் போக்குவரத்தைத் தடுக்கவோ அல்லது தடைசெய்யவோ வேண்டாம். அதேபோல் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்” என்றார்..