கோவை டிஐஜி விஜய்குமார் கையாண்ட முக்கிய வழக்குகள்… யார் இந்த விஜய்குமார்..?

கோவை சரக டிஐஜி விஜய்குமார் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்குமார் கையாண்ட முக்கிய வழக்குகள் இதோ..

கோவை சரக டிஐஜியாக இருந்த விஜய்குமாரின் சொந்த ஊர் தேனி. இவரது தந்தை ஓய்வு கிராம நிர்வாக அலுவலர் செல்லையா மற்றும் தாய் ஓய்வு ஆசிரியையான ராஜாத்தி. விஜயகுமாருக்கு ஒரு மூத்த சகோதரி மற்றும் இளைய சகோதரிகள் உள்ளனர்.

விஜயகுமாருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். மகள் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார். இவரது தாய், தந்தையர் தேனி ரத்தினம் நகரில் வசித்து வருகிறார்கள்.

குரூப் 1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக பதவி ஏற்ற பின் இரு ஆண்டுகளுக்கு பின்பு ஐபிஎஸ் தேர்வை தமிழ் வழியில் எழுதி வெற்றி பெற்றவர், முதன்முதலாக வள்ளியூரில் ஏஎஸ்பியாக பதவி ஏற்றார்.

கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை சிபிசிஐடி எஸ்பி ஆக அப்போது பணியாற்றி விசாரணை நடத்தினார்.

பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட டிஜிபி ஜாங்கிட் தலைமையிலான குழுவில் விஜய்குமார் இடம்பெற்றார்.

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் விஜய்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.