முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்கள்: கோவையில் கைது

கோவையில் முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்கள் கைது

கோவையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரிய ராயப்பன்,76. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
பொம்மணம்பாளையத்தில் பெரிய ராயப்பனும் அவரது மனைவி மட்டுமே வசித்து வருகின்றனர்.ராஜம்மாள், நேற்று காலை பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றார். வீட்டில் பெரியராயப்பன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், பகல், 2:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆணும், பெண்ணும், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது, வீட்டுக்குள் புகுந்த இருவரும், பெரியராயப்பனை கட்டிப்போட்டுவிட்டு, பீரோவில் இருந்த லாக்கரை உடைக்க முயன்றனர்.
முடியாததால், அங்கிருந்த பர்சில் இருந்து 2,000 ரூபாயை எடுத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றனர்.அப்போது, வெளியூரில் இருந்து மகனும், மருமகளும் வந்துள்ளனர்.
கட்டப்பட்ட நிலையில் இருந்த பெரியராயப்பன், தப்பிச் சென்ற திருட்டு ஜோடியை பிடிக்குமாறு கையால் சைகை செய்துள்ளார். இதையடுத்து, அருகில் உள்ளவர்களின் உதவியுடன் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.பிடிபட்ட இருவரிடமும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை விசாரணை செய்தார்.
விருதுநகரை சேர்ந்த தினேஷ்குமார்,23, பொறியியல் பட்டதாரி; திருச்சியைச் சேர்ந்த செண்பகவல்லி,24 எம்.பி.ஏ., மாணவி என தெரியவந்தது.