வீட்டில் சட்ட விரோதமாக வெடி தயாரிப்பு: உடல் சிதறி வாலிபர் பலி..!

சட்டவிரோதமாக வெடி தயார் செய்த போது ஏற்பட்ட விபத்தில் உடல் சிதறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள நல்லிவீரன் பட்டியில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்துள்ளார். இந்நிலையில் வெடி தயாரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு உடல் சிதறி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் பிரவீனின் வீடும் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் அக்கம் பக்கத்தில் இருந்த 3-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த 9 மாத குழந்தை மற்றும் தாய் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் பிரவீனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.