காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை..

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரகாஷ். இவரது மனைவி தனலட்சுமி (வயது 21). இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன் -மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவாரம்பாளையம் வந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து தனலட்சுமி கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கணவன் -மனைவி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தனலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கோவில் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு வருடத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.